தினமும் நாம் உண்ணும் உணவுப் பொருட்களாலும், பல்வேறுபட்ட சூழலுக்கு முகம்கொடுப்பதாலும் எமது உடலில் நச்சுப் பொருட்கள் சேர்கின்றன. இவை சரியான முறையில் வெளியேற்றப்படாவிட்டால், இவற்றின் அளவு நாளுக்கு நாள் எமது உடலில் அதிகரித்துக்கொண்டே செல்லும். இது எமது உடலில் பல்வேறுபட்ட நோய் நிலைமைகள் மற்றும் இன்னும் பல பிரச்சினைகள் உருவாக வழிவகுக்கும்.
மேலும் இதனால், மிகுந்த களைப்பு, உடல் பருமன், உடல் வலி, தலை வலி, மலச்சிக்கல் போன்ற புதிய பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்க நேரிடும். உடலில் ஏற்படும் இவ்வாறான பிரச்சினைகள் உள ரீதியாகவும் ஒருவரின் வாழ்வில் குறிப்பிடத்தக்களவு பாதிப்பை ஏற்படுத்தும்.
உடலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் இந்நச்சுக்களை பின்வருமாறு செய்து வந்தால், வெறும் ஏழே நாட்களில் உடலில் இருந்து நீக்கி, உடலையும், மனதையும் தூய்மையாக வைத்திருக்க அது வழிவகுக்கும்.
உடற்பயிற்சி
தினமும் குறைந்தபட்சம் 1 மணிநேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலின் இரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு, வியர்வையின் வழியே நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன.
மனதை சுத்தப்படுத்தவும்
உடலை மட்டும் சுத்தம் செய்தால் போதாது, தினமும் மனதையும் சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். எனவே முதலில் முடிந்தவரை உங்கள் மனதையும், சிந்தனைகளையும் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
தண்ணீர் அருந்துங்கள்
உடல் சுத்தமாக இருக்க வேண்டுமெனில் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். அதற்கு ஒரு நாளில் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரையாவது குடிக்க வேண்டும். இதனால் இரத்தத்தை சுத்திகரிக்கும் சிறுநீரகங்களில் செயல்பாடு ஊக்கப்படுத்தப்பட்டு, இரத்தத்தில் இருந்து நச்சுப் பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு சிறுநீருடன் அவை வெளியேற்றப்படும்.
எலுமிச்சை சாறு
தினமும் காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையை பிழிந்து, அதனுடன் தேன் சேர்த்து நன்றாகக் கலந்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.
பச்சை உணவுகள்
உடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபடும் போது, பச்சை உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக இந்நாட்களில் சாலட், முளைக்கட்டிய பயிர்கள், பழங்கள், பருப்பு வகைகள், தானியங்கள், மற்றும் விதைகளை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் பச்சை உணவுகளில் தான் நொதிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக இருக்கும்.
உணவை நன்கு மென்று விழுங்குங்கள்.
உணவை உண்ணும் போது நன்கு மென்று விழுங்க வேண்டும். இதனால் உண்ணும் உணவு எளிதில் சமிபாடடையும். உணவு எளிதில் சமிபாடடைந்தால், நீங்கள் நல்ல மனநிலையை உணர்வீர்கள்.
உடலை நன்கு தேய்த்து குளிக்கவும்
குளிக்கும் போது பிரஷ் உபயோகித்து நன்கு தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு பிரஷ் உபயோகித்து தேய்த்துக் குளிப்பதனால் உடல் மேற்பரப்பும் நன்கு சுத்தமடையும்.
மேற்கூறியவற்றை, குறைந்தது ஏழு நாட்களுக்காவது தொடர்ந்து கடைபிடித்து வாருங்கள். மாற்றத்தினை நீங்களே உணர்வீர்கள்.